செய்திகள்தமிழகம்

ஐஆர்சிடிசி சார்பில் ஆக.29-ல் மதுரையில் இருந்து உலகின் உயரமான படேல் சிலைக்கு சுற்றுலா ரயில்: தமிழகத்தில் இருந்து முதல்முறையாக இயக்கப்படுகிறது

53views

தமிழகத்தில் இருந்து முதல்முறையாக, குஜராத்தில் உள்ள உலகின் உயரமான படேல் சிலைக்கு ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இதில் ஜெய்ப்பூர் கோட்டைகள், உதய்பூர் ஏரிகளைக் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள், சென்னையில் நேற்று கூறியதாவது:

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகின்றன. நீண்டநாட்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த மக்களும் வெளியூர்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, தேவைக்கு ஏற்ப, ஆன்மிக மற்றும் இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத் தலங்களுக்கு மீண்டும் ஐஆர்சிடிசி சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகின்றன. மக்களும் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத்தில் இருக்கும் உலகின் உயரமான சர்தார் வல்லபபாய் படேல் சிலையைக் காண, தமிழகத்தில் இருந்து முதல்முறையாக ஐஆர்சிடிசி சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. ஜெய்ப்பூர் கோட்டைகள், உதய்பூர் ஏரிகளைக் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து இந்த சுற்றுலா ரயில் வரும் 29-ம் தேதி புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னை வந்து, பிறகு ஹைதராபாத் அருங்காட்சியகம், ஜெய்ப்பூர் கோட்டைகள், உதய்பூர் அழகிய ஏரிகள், குஜராத்தில் இருக்கும் மகாதேவர் கடல்கோயில், உலகின் உயரமான சர்தார் வல்லபபாய் படேல் சிலை ஆகியவற்றைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா 12 நாட்கள் கொண்டது. போக்குவரத்து, சைவ உணவுகள் உட்பட ஒருவருக்கு ரூ.11,340 கட்டணம். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் தகவல்களுக்கு 9003140680, 9840948484 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!