மக்களின் நலனுக்காக ஆட்சி நடத்துவதுதான் பாஜக-வின் நோக்கம் என்றும், தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தாலும் மேகதாதுவில் புதிய அணையைக் கட்டியே தீருவோம் எனவும் சுதந்திர தின விழா உரையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா கப்பன் பார்க் ரோட்டில் உள்ள மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அணிவகுப்பை பார்வையிட்டு மீண்டும் மேடைக்கு வந்த அவர் சுதந்திர தின உரையாற்றினார்.
அவ்போது பசவராஜ் பொம்மை, ‘மொழி, கலாசாரம், கலை, கல்வி, பொருளாதாரம் உள்பட எந்த துறையாக இருந்தாலும் சரி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுதான் அரசின் முக்கிய நோக்கம் ஆகும். 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அதனால் ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் விழா பெலகாவி, சிக்பள்ளாப்பூர், மண்டியா ஆகிய மாவட்டங்களில் கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த 75ஆவது சுதந்திர தின விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும்.
வளர்ச்சியை ஏற்படுத்தத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். வளர்ச்சி தான் எங்கள் ஆட்சியின் மந்திரம். வெள்ளம், கொரோனா பரவல் போன்ற பேரிடர் நேரத்தில் சிறப்பான முறையில் கர்நாடக அரசு செயல்பட்டது. முன்னாள் முதலமைச்சராக எடியூரப்பாவின் வளர்ச்சி பாதையில் நான் தொடர்ந்து பயணித்து வருகிறேன். வளர்ச்சி சக்கரம் எப்போதும் முன்னேறி செல்ல வேண்டும். நம்பகத்தன்மை, திறமை, நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலன் சார்ந்த ஆட்சியை நடத்துவது தான் எங்கள் அரசின் நோக்கம்.
கொரோனா பரவலால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் நடுங்கிப்போய் உள்ளன. அதே நிலையில் தான் இந்தியா, கர்நாடகம் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நடவடிக்கைகளால் கொரோனா பரவலை சரியான முறையில் நிர்வகித்தோம். கர்நாடகத்தில் எடியூரப்பாவின் திறன்மிகு ஆட்சியால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. மக்களின் உயிர்களை காக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நாங்கள் மோசமான அளவில் நடவடிக்கை எடுத்தோம். பல்வேறு தரப்பு தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
மருத்துவ ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது அவற்றை சரிசெய்ய உடனடியாக தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளா, மராட்டிய எல்லையில் உள்ள 8 மாவட்டங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படு உள்ளன. மருத்துவ வசதிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளுக்கான ஐ.சி.யு. படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் 2ஆவது, 3ஆவது நகரங்களில் தொழில் நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை அதிகரிக்க ரூ.4,636 கோடி செலவில் 150 தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. கல்லூரிகளில் 2,500 ஸ்மர்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் கற்றலை ஊக்கப்படுத்த 1.55 மாணவா்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுகிறது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி என்ஜினீயரிங் கல்லூரிகளில் கன்னடத்திலும் பாடங்கள் கற்பிக்கப்படும்.
மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும். உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கூடுதல் நீர் ஒதுக்கீட்டை பயன்படுத்த இந்த அணை உதவும். தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாங்கள் மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம்.
இந்த திட்டத்தில் இருந்து கர்நாடக அரசு பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இது குடிநீருக்கும், மின் உற்பத்திக்கும் அவசியமானது’ இவ்வாறு கூறினார் பசவராஜ் பொம்மை.




