பிரித்தானியா மகாராணி இனி தலைவர் இல்லை! இவர் தான் நம் அதிபர்: குடியரசு நாடாக அறிவித்த பிரபல நாடு
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாடு தன்னை குடியரசு நாடாக அறிவித்துள்ளது.
பிரித்தானியா மகாராணியை தலைவராக கொண்டிருந்த பார்படாஸ் நாடு, தற்போது தன்னை ஒரு தனி குடியரசு நாடாக அறிவித்துள்ளது.
கடந்த 400 ஆண்டுகளாக பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பார்படாஸ் தற்போது புதிய அதிபரையும் அவரே இனி நாட்டின் தலைவர் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், மேற்கிந்திய தீவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்று தான் Barbados. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தீவிற்கு வந்த பிரித்தானியர்கள், அப்போதில் இருந்தே இதை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதனால், தற்போது வரை இந்த தீவு நாட்டின் தலைவராக பிரித்தானியா மகா ராணி எலிசபெத் இருந்து வந்தார். பிரித்தானியாவின் அடிமை நாடுகளில் ஒன்றாக திகழ்ந்த பார்படாஸ், 55 வருடங்களுக்கு முன்பு விடுதலை பெற்றது.
இருப்பினும், பிரித்தானிய மகாராணியை தான் தனது தலைவராக இந்த நாடு ஏற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தன்னை குடியரசு நாடாக பிரகடனம் செய்துள்ளதாகவும், நாட்டின் புதிய அதிபராக Sandra Mason தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், இவர் தான் நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்து வந்ததால், இவரே இனி நாட்டின் தலைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய குடியரசாக அறிவிக்கும் விழா தலைநகர் Bridgetown நடைபெற்றது.
நள்ளிரவில் நடந்த விழாவில் பிரித்தானியா சார்பில் இளவரசர் சார்லஸ் கலந்து கொண்டார். நள்ளிரவு 12 மணியானதும் புதிய குடியரசு பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிரித்தானியா மகா ராணியின் கொடி இறக்கப்பட்டு, பார்படாஸ் நாட்டின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தேசிய கீதமும் பாடப்பட்டது.
Barbados-ன் அதிபராக பொறுப்பேற்ற பின்பு Sandra Mason கூறுகையில், நமது நாட்டின் எதிர்காலத்தை நாம் கட்டியமைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். நாம் இன்று முதல் பார்படாஸ் மக்கள் என்று பெருமையயோடு கூறிக் கொள்வோம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளவரசர் சார்லஸ், இது ஒரு புதிய துவக்கம், இருளடைந்த கடந்த காலத்திலிருந்தும், அடிமைகளாக இந்த நாட்டு மக்கள் இருந்த துயரமான காலத்திலிருந்தும் மீண்டுள்ளீர்கள். இது வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே இருக்கும். அசாதாரணமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது என்று கூறினார்.
பிரித்தானியா மகா ராணி Barbados-க்கு மட்டும் தலைவராக இல்லை, அவுஸ்திரேலியா, கனடா, ஜமைக்கா என 15 நாடுகளுக்கும் அவர் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.