பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சி: ஹரியாணா முதல்வர் வலியுறுத்தல்
பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்காக, பஞ்சாப் அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று மனு அளித்தார். பின்னர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது: பஞ்சாப் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்துள்ளேன். பஞ்சாப் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். விரைவில் நடக்க உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் நடத்த வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடியும் பஞ்சாப் வருவார். இப்போதைய பஞ்சாப் காங்கிரஸ் அரசு தலைவர்களுக்கு பாதுகாப்பையோ சட்டம் ஒழுங்கையோ உறுதிப்படுத்தாது. பஞ்சாபில் பிரதமரின் நிகழ்ச்சியில் இடையூறுகள் உருவாக்கப்படுவது முற்றிலும் ஏற்கமுடியாதது. இவ்வாறு மனோகர் லால் கட்டார் கூறினார்.