நட்பு கால்பந்து: மும்பை அணி வெற்றி
நட்பு கால்பந்து போட்டியில் மும்பை அணி 2-1 என, ஐதராபாத் அணியை வீழ்த்தியது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 8வது சீசன் வரும் நவ. 19 முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக ‘நடப்பு சாம்பியன்’ மும்பை சிட்டி அணி, நட்பு ரீதியிலான போட்டிகளில் பங்கேற்கிறது. கோவாவில் நடந்த முதல் போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு இகோர் அங்குலோ, குர்கீரத் சிங் தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர். ஐதராபாத் அணிக்கு பர்த் ஆக்பெச்சே ஒரு கோலடித்து ஆறுதல் தந்தார்.மும்பை அணி, தனது 2வது நட்பு போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை வரும் நவ. 4ல் எதிர்கொள்கிறது.