தமிழகம்

நடிப்புலக சரித்திர நாயகன் சிவாஜி கணேசன் பிறந்த நாள், இன்று

54views

தமிழ் திரையுலகில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்து எல்லோராலும் நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். அவரின் 93வது பிறந்த நாளான இன்று அவர் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

இன்றும் கோடம்பாக்கத்தை நோக்கி நடிப்பு கனவுகளோடு படையெடுக்கும் பலருக்கும் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர் சிவாஜி கணேசன். 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தஞ்சாவூர் அருகில் உள்ள சூரக்கோட்டை என்ற கிராமத்தில் கணேசனாக பிறந்த இவர், இளம் வயது முதலே நடிப்பின் பால் ஈர்க்கப்பட்டு மேடை நாடகங்களில் எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கினார்.

பேரறிஞர் அண்ணா எழுதிய “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடித்த இவரது நடிப்புத்திறனை பார்த்து வியந்த தந்தை பெரியார், ‘சிவாஜி’ கணேசன்’ என்று மேடையில் அழைத்தார். அன்று பெரியார் உச்சரித்த அந்த பெயர் பின்னாளில் தமிழ் திரையுலக சரித்திரத்தில் ஒரு நீங்கா அத்தியாயம் ஆகிவிட்டது.

1952ம் ஆண்டு கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் சிவாஜி. சமூக பார்வை கொண்ட நீளமான மற்றும் ஆழமான வசனங்களும் சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பும் ஒரே படத்தில் இவருக்கு மாபெரும் கலைஞன் அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

வ.உ.சி, பகத்சிங், திருப்பூர் குமரன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை உச்சரிக்கும்போதே நம் நினைவு திரையில் தோன்றும் முகம் இவருடையதாகவே இருக்கும்.

அதேபோல் சிவபெருமான், கிருஷ்ணர், முருகன் என பல தெய்வங்களின் வேடங்களிலும் நடித்து கற்பனைக்கும் தன் நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார்.

ஹீரோவாக பல படங்களில் கோலோச்சிய சிவாஜி கணேசன், தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் தேவர் மகன், படையப்பா, ஒன்ஸ் மோர் என குணச்சித்திர வேடங்களிலும் அதே வசீகரத்தோடு நடித்து வந்தார். இவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் வெளியான கர்ணன் திரைப்படம் வசூலில் பல சாதனைகள் புரிந்து இவருடைய ஆளுமையை பறைசாற்றி இருந்தது.

செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் சிவாஜி கணேசன். அதோடு கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, தாதா சாகெப் பால்கே விருது என பல விருதுகள் இவரை கௌரவிக்கின்றன. அண்மையில் இவருடைய பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

திரையில் இவர் தோன்றிய பிறகு நடிக்க வந்த எல்லா நடிகர்களிடமும் தெரிந்தோ தெரியாமலோ இவருடைய தாக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. அந்தவகையில் நடிப்பு எனும் கலையின் மூலம் சிவாஜி கணேசன் எனும் மாபெரும் கலைஞன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!