தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; தளர்வுகளை கொண்டு வர அரசு முடிவு
தென்கொரியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. கடந்த 2 வாரத்திற்கு முன், ஒமைக்ரான் அலையானது, அந்நாட்டில் நாளொன்றுக்கு 1.4 லட்சம் முதல் 2.7 லட்சம் வரை பதிவாக கூடும் என கணிக்கப்பட்டு இருந்தது.
எனினும், இதனை கடந்து நாள்தோறும் பதிவாகும் எண்ணிக்கை அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு கழகம் கூறும்போது, அதிக தொற்றும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கொரோனா அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சுகாதார அதிகாரிகள் கணித்ததற்கும் கூடுதலாக அதிக அளவில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது என தெரிவித்து உள்ளது. அந்நாட்டில் நேற்று (வியாழ கிழமை) ஒரே நாளில் 6,21,328 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகின. 429 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அந்நாட்டில் 86.6% மக்கள் முழு அளவில் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதற்கு முன்பு, தென்கொரியா, கொரோனா பாதிப்புகளை கண்டறிதல், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றில் தீவிரம் காட்டி வந்தது. முககவசம் அணிவது கட்டாயம் என தெரிவித்தது. எனினும், பெரிய அளவிலான ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இறங்கவில்லை.
தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தபோதிலும், கட்டுப்பாடுகளில் தளர்வுகளை கொண்டு வர முடிவு செய்து உள்ளது. இதுபற்றி சுகாதார அமைச்சக அதிகாரி சன் யங்-ரே கூறும்போது, பருவகால தொற்று போன்றே கொரோனாவை அணுக வேண்டும்.
இந்த ஒமைக்ரான் பரவலே இறுதியான பெரிய நெருக்கடியாக இருக்கும். இதனை கடந்து வந்துவிட்டால், இயல்பு வாழ்க்கைக்கு நாம் நெருங்கி வந்து விடுவோம் என கூறியுள்ளார்.