தமிழகத்தில் பயங்கரவாதம் தலையெடுக்கிறது: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
‘பா.ஜ., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தி.மு.க., ஆட்சியில் பயங்கரவாதம் தலையெடுக்க துவங்கி விட்டதை உணர்த்துகிறது’ என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2007ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, தி.மு.க.,வினர் ஊர்வலமாக வந்து, பா.ஜ., அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இப்போது, பா.ஜ., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், பா.ஜ., அலுவலகம் தாக்கப்படுவதும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதும் வாடிக்கையாக உள்ளது. சம்பவம் நடந்த உடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை போலீசார், தண்ணீர் ஊற்றி கழுவி உள்ளனர்.
அவசரமாக தடயங்களை அழிக்க உத்தரவிட்டது யார் என்பதை, போலீசார் விளக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணை கூட துவங்காத நிலையில், ‘நீட்’ தேர்வை பா.ஜ., ஆதரிப்பதால், அவர் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசார் பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளனர்.சம்பந்தப்பட்ட நபரின் பின்னணியைப் பார்க்கும்போது, ‘நீட்’ தேர்வுக்காக பெட்ரோல் குண்டு வீசினார் என்பது நம்பும்படி இல்லை. பா.ஜ., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தி.மு.க., ஆட்சியில் பயங்கரவாதம் தலையெடுக்க துவங்கி விட்டதையே உணர்த்துகிறது. இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.