இந்தியா

டெல்லிக்கு கோவாக்சின் தரமுடியாது; பாரத் பயோடெக் கடிதத்தால் சிக்கல்

94views

டெல்லி அரசாங்கம் கேட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசிகளைத் தரமுடியாது என பாரத் பயோடெக் நிறுவனம் கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்தக் கடித விவரத்தை காணொலிப் பேட்டியொன்றில் வெளியிட்டார், அந்த மாநிலத்தின் துணைமுதலமைச்சர் மணிஷ் சிசோடியா.
கொரோனா முதல் அலையின்போது தொற்றுக்கு ஆளான சிசோடியாவே, கொரோனா பாதிப்பைக் கையாளும் சிறப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். டெல்லி ஒன்றியப் பிரதேச அரசாங்கத்தின் சார்பில், 1.34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவுசெய்யப்பட்டது. அதற்காக சீரம் நிறுவனத்திடமிருந்து கோவிசீல்டு தடுப்புமருந்தையும் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்புமருந்தையும் தலா 67 லட்சம் டோஸ் வேண்டும் எனக் கேட்டிருந்தது.
இந்த நிலையில் கோவாக்சின் உற்பத்தி நிறுவனமான பாரத்பயோடெக் தங்களால் டெல்லி அரசு கேட்டிருந்த தடுப்புமருந்தை அனுப்பமுடியாது என்று நேற்று கடிதம் அனுப்பியுள்ளது. இதை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த சிசோடியா, “இப்போதைக்கு இங்கு கோவாக்சின் தடுப்பூசி சுத்தமாக இல்லை; முழுவதும் தீர்ந்துவிட்டது. கோவிசீல்டு தடுப்புமருந்து செலுத்தும் மையங்களை மட்டுமே திறந்துவைத்திருக்கிறோம்.” என்று கூறினார்.
டெல்லி பிரதேச சுகாதாரத் துறைச் செயலாளருக்கு பாரத்பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா அனுப்பிய அந்தக் கடிதத்தையும் சிசோடியா காட்டினார். கடந்த 7ஆம் தேதி டெல்லி அரசாங்கம் எழுதியிருந்த கடிதத்துக்கு பதிலாகவே அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.
அந்தக் கடிதத்தின் சாரம் இதுதான்: ” டெல்லி அரசாங்கம் ஏராளமாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வது நல்லது. ஆனால், மாதம்தோறும் உற்பத்தி அதிகரித்தபடி இருந்தாலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எங்கள் தடுப்புமருந்துக்கான தேவை அதிகமாகி இருக்கிறது. மேலும், உரிய அரசாங்க அதிகாரிகளின் வழிகாட்டலின்படிதான் நாங்கள் மருந்துகளை (மாநிலங்களுக்கு) அனுப்பிவருகிறோம். ஆகையால் உங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் மருந்தை வழங்க எங்களால் முடியாது. வருந்துகிறோம்.
இந்தக் கடித வரிகளின்படி, “எந்த மாநிலத்துக்கு எவ்வளவு தடுப்பூசி தேவை என்பதை மத்திய அரசே தீர்மானிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதே மத்திய அரசாங்கம்தான், எந்த மாநிலமும் அவர்களுக்குத் தேவைப்படும் அளவு தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளலாம் என கொள்கை முடிவாக அறிவித்தது. பிறகு, ஏன் அதற்கு மாறாக தடுப்புமருந்து உற்பத்தியாளர்களிடம் வேறுமாதிரி கட்டுப்படுத்தவேண்டும்? ” என்றார் சிசோடியா.
இதனால், மத்திய அரசுக்கு நான்கு கோரிக்கைகளை முன்வைப்பதாகக் கூறினார். அவற்றில் முதன்மையானது, தடுப்புமருந்தை ஏற்றுமதிசெய்ய அந்த நிறுவனங்களுக்கு உடனடியாகத் தடைவிதிக்கவேண்டும் என்பதே! அத்துடன், இன்னும் பல மருந்துநிறுவனங்களை தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடுத்தவேண்டும்; இதைச் செய்யாவிட்டால் அடுத்த மூன்றாவது, நான்காவது அலைகளின்போது மக்கள் சாவது தொடரும் என கடுமையாகவும் குறிப்பிட்டார், சிசோடியா.
நாட்டில் நிலவிவரும் கொரோனா பாதிப்பின் முழுப் பரிமாணத்தையும் தேசிய அரசாங்கமாக இருக்கும் மத்திய அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்; மாநிலங்களை உலக சந்தையில் முட்டிமோதி வாங்கிக்கொள்ளுமாறு கூறுவதற்குப் பதிலாக, மத்திய அரசே அவற்றை வாங்கி, மாநிலங்களுக்கு வழங்கவேண்டும் என்பது அடுத்த கோரிக்கை.
அதன்பிறகு மூன்று மாதங்களுக்குள் எல்லா மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்திமுடிக்க அறிவுறுத்தவேண்டும் என்பது கடைசிக் கோரிக்கை. இதுவரை, 5.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை டெல்லி அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. அதில் 1.5 லட்சம் கோவாக்சின்; மீதமுள்ளவை கோவிசீல்டு தடுப்பூசிகள். அதாவது இவை 18 முதல் 444 வயதுவரை உள்ளவர்களுக்கானவை. 3.3 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை இதுவரை டெல்லி அரசு பயன்படுத்திவிட்டது. கைவசம் 2.19 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன; அவை அனைத்துமே கோவிசீல்டுதான். இன்னும் மூன்று நாட்களுக்கே இது சரியாக இருக்கும் என்றார், இதே பேட்டியில் சிசோடியாவுடன் இருந்த ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அதிசி, ”விரைவில், 2, 66, 690 கோவிசீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளதாகவும் அவை மேற்கொண்டு 6 நாள்களுக்குதான் தாக்குப்பிடிக்கும்,” என்றும் அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!