தமிழகம்

ஜெயலலிதா மரணத்தில் திடீர் திருப்பம்… சசிகலா குற்றவாளி… அப்போலோ சொன்னது பொய்… விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

70views
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதாவின் மறைவில், சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த இந்த ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா மரணம் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் இரண்டு சாட்சிகளின் அடிப்படையில் டிசம்பர் 4-ஆம் தேதி மதியம் 3.50 மணிக்குள்ளாகவே அவர் இறந்துவிட்டதாக விசாரணையில் தெரிவதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு செல்வதற்கு 3 நாட்களுக்கு முன்பே ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் இருந்தது. உடல்நலக்குறைவு ஏற்பட்டபின் வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரைபடி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ அல்லது அறுவை சிகிச்சை ஏன் நடக்கவில்லை? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

அத்துடன் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக பொய்யான அறிக்கையை வெளியிட்டதாகவும், எனவே பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை. எனவே சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
சசிகலா உடன், கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து இவர்கள் மீதான விசாரணைக்கு உத்தரவிட ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!