ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் அசத்திய ஜாம்ஷெட்பூர் அணி 3-0 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.
கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து எட்டாவது சீசன் நடக்கிறது. பம்போலிம் நகரில் நடந்த லீக் போட்டியில் கேரளா, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. முதல் பாதி ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (45+3வது நிமிடம்) ஜாம்ஷெட்பூர் அணிக்கு கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் கிரெக் ஸ்டீவர்ட் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் கேரளா அணி 0-1 என, பின்தங்கி இருந்தது.
இரண்டாவது பாதியின் 48வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு கிடைத்த 2வது ‘பெனால்டி’ வாய்ப்பில் ஸ்டீவர்ட் மீண்டும் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து அசத்திய ஜாம்ஷெட்பூர் அணிக்கு 53வது நிமிடத்தில் டேனியல் சிமா சுக்வு ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய கேரளா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 3-0 என, வெற்றி பெற்றது.
ஜாம்ஷெட்பூர் அணி, 14 போட்டியில், 7 வெற்றி, 4 ‘டிரா’, 3 தோல்வி என, 25 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. கேரளா அணி 14 போட்டியில், 6 வெற்றி, 5 ‘டிரா’, 3 தோல்வி என 23 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது.