ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மன்ப்ரீத் சிங் தலைமையிலான ஹாக்கி அணி
ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் அடுத்தமாதம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 16 வீரர்கள் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மன்ப்ரீத் சிங் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்துக்கொள்ள இருக்கும் 16 பேர் கொண்ட இந்திய ஹாக்கி ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10 அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6 பேர் அனுபவம் வாய்ந்தவர்கள். இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் இதுவரை 11 பதக்கங்களை வாங்கியிருக்கிறது. அதில் 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் அடங்கும். ஆனால் கடந்த 41 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் எதையும் வெல்லவில்லை.
இப்போதிருக்கும் இந்திய ஹாக்கி அணி 2016, 2018 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, 2017 ஆசிய தங்க கோப்பை மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சீரிஸ் கோப்பையையும் வென்றுள்ளது. இம்முறை அனுபவமும் இளமையும் கொண்ட ஹாக்கி அணியை தேர்வு செய்து அனுப்பியுள்ளது. ஜப்பான் ஒலிம்பிக்கில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியுடன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூசிலாந்து மற்றும் ஜப்பான் இடம்பெற்று இருக்கிறது.
இந்திய ஹாக்கி அணி விவரம்
கோல் கீப்பர்: பிஆர் ஸ்ரீஜேஷ்
தடுப்பாட்ட வீரர்கள்: ஹர்மன்ப்ரீத் சிங், ருபிந்தர் பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திரா லக்ரா
நடுக்கள வீரர்கள்: ஹர்திக் சிங், மன்ப்ரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்டா சர்மா, சுமித்.
முன்கள வீரர்கள்: சம்ஷேர் சிங், தில்ப்ரீத் சிங், குர்ஜான்த் சிங், லலித் குமார் உபாத்யாய, மந்தீப் சிங்