ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு.. நாடு முழுவதும் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, பயன்பாடு ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் இறுதியாக கடலை அடைந்து நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், இந்தியாவில் 2022ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், தேக்கிவைத்தல், விநியோகம் போன்றவைக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் க்ரீம் கப்புகள், ஸ்ட்ரா, ஸ்பூன் போன்றவையும் இந்த தடையில் அடங்கும். பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் செப்டம்பர் 30 முதல் 50 மைக்ரானில் இருந்து 75 மைக்ரானாக அதிகரிக்கப்படுவதாக பின்னர் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முதல்பிளாஸ்டிக் பைகளின் தடிமனுக்கான அளவு 120 மைக்ரானாக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.