சினிமா

எனக்கு நிறைய பிரச்சனை கொடுக்கறாங்க.. என்னை நீங்கதான் பார்த்துக்கணும்.. மேடையில் கண்கலங்கிய சிம்பு!

97views

தனக்கு நிறைய பிரச்சனை கொடுக்கப்படுவதாக மாநாடு மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இந்தப் படம் டைம் லூப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் பின்னர் தேதி ஒத்திவைக்கப்பட்டு வரும் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் பேசிய சிம்பு கண்ணீர் விட்டு அழுதது பார்வையாளர்களையும் அவரது ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது. நிகழ்ச்சியில் பேசத் தொடங்கிய நடிகர் சிம்பு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா குறித்து பேசிய சிம்பு, யுவன் தான் எனக்கு எல்லாமே ஃபிரண்ட்.. கைட்… எக்ஸ்ட்ரா… நான் என்ன சொன்னாலும் தாங்கிகொள்வார் என்றார்.

தொடர்ந்து பேசிய சிம்பு, யுவனிடம், தயவு செஞ்சு சொல்லுங்க சார் நீங்க என்ன நட்சத்திரம்? என்ன ராசி? என்று அதே ராசி நட்சத்திரத்தில் உள்ள பெண் தான் எனக்கு வேண்டும் என்றார். என்னை தாங்கிக்கொள்ளும் சக்தி அப்போதுதான் இருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய சிம்பு, “எனக்கு நிறைய பிரச்னை கொடுக்கறாங்க. ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்னை நீங்கதான் பார்த்துக்கணும்” என்று கண்ணீர்விட்டு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். சிம்பு அழுவதை பார்த்த நடிகர் மகத், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனஞ்செயன் ஆகியோர் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினர்.

நடிகர் சிம்புக்கு விதித்த ரெட் கார்டை கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது. மேலும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்கு தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவிக்கப்பட்டது. மைக்கேல் ராயப்பனின் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அங்கே முடிவு செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதன்பிறகும் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பை நடத்த விடாமல் சிலர் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனக்கு நிறைய பிரச்சனை கொடுப்பதாக கூறி சிம்பு நிகழ்ச்சி மேடையிலேயே கண்ணீர் விட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!