கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்த வந்த அமெரிக்காவில் தற்போது தொற்றின் தாக்கம் குறைந்த வண்ணமே உள்ளது.
அங்கு கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி வழங்கல் முழு மூச்சாக நடைபெற்று வருகின்றமையே இதற்கு காரணமாகும். இதுவரை மொத்த சனத்தொகையில் 46 சதவீதத்தினருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அதில் 15 கோடி 40 லட்சம் பேரும் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 11 கோடி 70 லட்சம் பேருக்கு கொரோன தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலே இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லையென அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே வளர்ந்த நாடுகளும் செல்வந்த நாடுகளும் பிற நாடுகளுக்கு தடுப்பூசி பெற்றுக் கொடுப்பதில் உதவிகளை வழங்குமாறு ஐ.நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் தங்களில் தேவைக்கு அதிகமாக இருக்கும் 8 கோடி தடுப்பூசிகளை தடுப்பூசி கிடைப்பதில் ஏற்றத் தாழ்வுடன் இருக்கும் நாடுகளுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அடுத்த 6 வாரங்களுக்கு இந்த 8 கோடி தடுப்பூசிகளும் உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.




