இந்தியா

ஆண், பெண் இருபாலின மாணவர்களுக்கும் ஒரே சீருடை அறிமுகம்.

75views

கேரளாவில் பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் பாலின பாகுபாட்டை அகற்றும் வகையில் ஆண், பெண் இருபாலின மாணவர்களுக்கும் ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக பாலின சமத்துவம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பள்ளி சீருடையில் பாலின பாகுபாட்டை அகற்றும் விதமாக மாணவர்களுக்கு பாலின பாகுபாடற்ற சீருடையை அறிமுகப்படுத்தி உள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தின் பாலுசேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் இந்த பாலின பாகுபாடற்ற சீருடை செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த புதன்கிழமையன்று இந்த பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 200 மாணவிகள் ஆண்களை போல மேல் சட்டையும், பேண்டும் அணிந்துகொண்டு பள்ளிக்கு வந்தனர்.

இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், ‘சீருடை மாற்றம் குறித்து பணியாளர் கவுன்சில் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டங்களில் கலந்தாலோசிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த சீருடை மாற்றம் மாணவிகளுக்கு சவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. விளையாட்டுகள் மற்றும் இதர போட்டிகளில் கலந்து கொள்ள இந்த உடை மாணவிகளுக்கு ஏதுவாக அமையும்’ என்று கூறியுள்ளார்.

கேரளாவில் முதல்முறையாக பாலின பாகுபாடற்ற சீருடை 2018-ல் எர்ணாகுளம் மாவட்டத்தின் வலையஞ்சிரங்காராவில் உள்ள பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!