இந்தியா

‘ஆங்கிலத்திற்கு மாற்று மொழி இந்தி மொழிதான்’: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சால் சர்ச்சை

165views

நாட்டில் வெவ்வேறு மொழிகளை பேசும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37வது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய அவர், நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை நிச்சயமாக இது அதிகரிக்க செய்யும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று வலியுறுத்தினார்.

பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில், அது பரப்பப்படாது. ஒன்றிய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். நாட்டின் குடிமக்கள் பேசும் மொழி ஒரே மொழியாக இருக்கும்போது அது இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும்.

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்க வேண்டும் என்றும் வெவ்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள், தொடர்பு வழியாக இந்தியாவின் மொழி இருக்க வேண்டும் எனவும் அமித்ஷா குறிப்பிட்டார். இதனிடையே, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழ்நாடு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தியை திணிக்க நினைத்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும். #இந்திவேண்டாம்_போடா #StopHindiImposition என்று ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மையில் நடத்தப்படும் தாக்குதல் இது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!