அமெரிக்காவில் அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 39 பேர் மாயம்
அமெரிக்காவில் அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 39 பேர் மாயமாகி உள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நடுக்கடலில் படகு ஒன்று கவிழ்ந்து கிடப்பதை கண்டனர். பின்னர் அருகில் சென்று பார்த்த போது, படகின் மேற்பகுதியில் ஒருவர் அமர்ந்து கொண்டு உயிருக்கு போராடுவதை பார்த்தனர். பின்னர் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் அவரை மீட்டு கரைக்க கொண்டு வந்தனர். இந்த விபத்து தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
இது தொடர்பாக மியாமி கடற்படை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கடலில் தத்தளித்து கொண்டிருந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒரு ஆட் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் கடந்த 21-ம் தேதி இரவு 39 பேரை ஏற்றிக் கொண்டு பகாமா தீவில் இருந்து புறப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக மியாமி கடற்பகுதியில் திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு வரை தவிர அனைவரும் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இவர்களை கடற்படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். சமீபத்தில் கனடாவில் இருந்த அமெரிக்காவிற்குள் ஆட் கடத்தல் கும்பலின் உதவியோடு நுழைய முயன்ற நான்கு இந்தியர்கள் கடும் பனியில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.