தமிழகம்

தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

1.03Kviews
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். சண்முக சுந்தரி, லெட்சுமி, செல்லத்துரைச்சி, ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட பொருளாளர் தர்மராஜ் துவக்கவுரை ஆற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் தேவி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மேலும், சிஐடியு மாவட்ட தலைவர் அயூப்கான், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மார்த்தாண்ட பூபதி, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாடசாமி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பீ.ராஜசேகர் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினர். சிஐடியு மாவட்ட செயலாளர் மணிகண்டன் நிறைவுரையாற்றினார்.
இந்த தர்ணா போராட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவது போல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்க மே மாதம் முழுவதும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஒய்வூதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடன் பதவி உயர்வு மற்றும் 10 வருடம் பணி முடித்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையின்றி அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
குறு மையத்திலிருந்து பிரதான மையத்திற்கு பதவி உயர்வில் சென்றவர்களுக்கு ஊதிய உயர்வு (இன் கிரிமென்ட்) வழங்க வேண்டும், குழந்தைகள் வருகை குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை இணைக்கும் ( மெர்ஜ் ) திட்டத்தை கைவிட வேண்டும். பொது வருங்கால வைப்பு நிதியில் இருந்து (NMP.GPF) ஊழியர்களுக்கு லோன் வழங்கிட வேண்டும். பணி ஒய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் வழங்கிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள ஆயிரக்கணக்காண காலிப் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு ஊழியரை போல் ஒரு வருடம் வழங்கிட வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவூட்டு செலவீனத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் சிஐடியு மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!