சிறுகதை

உறவுகள் சிறுகதை

349views
சிறுகதை :
ஆறுமுகம் வாத்தியாருக்கு ஒவ்வொரு வருடமும் ஏழாம் வகுப்பு மாணவ மாணவிகள் செல்லப் பிள்ளைகள் தான். பாசமாக இருப்பார்.
மெல்ல வாழைப்பழத்தில் ஊசி.. இல்லை இல்லை ஆணி ஏற்றினாற்போல் பாடம் நடத்துவார். ஆறாம் வகுப்பு வரை சரித்திரம் பூகோளத்தில் மிகக் குறைவாய் மதிப்பெண் எடுத்தவர்கள் கூட ஏழாம் வகுப்பில் எண்பதுக்கு மேல் எடுப்பார்கள்.
அன்று என்னவோ பாண்டி மிகவும் சோர்வாகத் தெரிந்தான். ஆறுமுகம் சார் அவனருகில் சென்று விசாரித்தார்.
ஆம் இரண்டு மாதங்களுக்கு முன் அவன் அப்பா ஒரு விபத்தில் காலமாகியிருந்தார். அவன் அப்பாவிற்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை. பாட்டியும் தாத்தாவும் பரிதவிக்கிறார்கள் தற்போது.
அம்மா வள்ளிக்கும் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அவள் அம்மா அப்பாவும் மகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தைக் கண்டு வாடிக் கொண்டிருந்தனர்.
பாண்டி பாவம். எட்டாம் வகுப்பு படிக்கிறான். ஏழு எட்டு வருடமாவது படித்தாக வேண்டும்.
அம்மாவும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தாலும் இருவரின் சாப்பாட்டு செலவுக்கே சரியாய் போனது.
இரண்டு பெற்றோர்கள் வாழ்வே சூனியமானது போல இருந்தனர்.  வள்ளியால் என்ன செய்ய முடியும் என்றெல்லாம் யோசிக்கக்கூட முடியவில்லை.
வள்ளியின் பெற்றோருக்கு சொந்தமாக ஒரு சின்ன வீடு இருக்கிறது. மாமனார் மாமியாருக்கோ பெரிதாக சொத்து பத்து, சொந்த பந்தங்கள் இல்லை.
ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது என்பது நடவாத காரியமானது.
எல்லோருக்கும் ஒரே ஆதரவாக இருந்தது பாண்டியின் அப்பாதான். இதனைச் சுருக்கமாக சொல்லி முடித்தது அந்த பிஞ்சு உள்ளம் ஆறுமுகம் சாரிடம்.
அவரால் என்ன செய்ய முடியும்? ஆறுதலாக முதுகைத் தடவிக் கொடுத்தார்.
வீட்டிற்கு போனபின்பும் உறுத்தலாக இருக்கவே ஒரு முடிவுக்கு வந்தார்.
தானே முன்வந்து பாண்டிக்கு பள்ளிப் படிப்பு முடியும் வரை கட்டணம் செலுத்துவதாக அறிவித்தார்.
அவன் அம்மா சம்பளத்தில் ஐந்து சீவன்கள் வாழ்க்கை நடத்தியது. வயோதிகமும், பலகீனமும் வாட்டியது.
இதோ பாண்டி காலேஜில் முதல் மாணவனாக தேறி கேம்பஸில் நல்ல வேலையும் கிடைத்தது. அதைப்பார்க்கவோ அனுபவிக்கவோ தாத்தா பாட்டி இல்லை. அம்மாவும் பலகீனமாகவே காணப்பட்டாள்.
இழப்புக்களை அதிகம் சந்தித்தவள். உறவென்று ஒரே மகன். ஒரு சின்ன வட்டம் கூட இல்லை. புள்ளியாக ஆனது உறவென்பது.
வீட்டிற்கு ஒன்று என்றானபின் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அத்தை, மாமா உறவுகள் அற்றுப்போனது.  உறவுகள் தொடர்கதையாகவில்லை.
உறவுகள் சிறுகதை ஆனது. உணர்வுகள், அதன் தாக்கம், ஏக்கம் தொடர்கதையானது. மீண்டும் பத்துப்பேராக எட்டுப்பேராக ஒரு தாய் வயிற்றில் பிறப்போமா?
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்.

1 Comment

  1. கதை அருமை சிறுகதை என்றாலும் கருத்துக்களை கூறிய
    விதம் அருமை அழகான நடையில் அருமையாக சிறுகதை

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!