தமிழகம்

சென்னையில் புதிய ரயில்வே சுரங்கப் பாதை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

160views
முனைவர் என்.பத்ரி
சென்னை குரோம்பேட்டை பகுதியில் புதியதாக ரயில்வே சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இதனை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜனவரி 7 ஆம் தேதி அன்று மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த நீண்ட நாள் கோரிக்கையாகும் இது.
இந்த சுரங்கப்பாலம் குரோம்பேடை இராதாநகர், ஜமீன் ராயப்பேட்டை, நெமிலிச்சேரி, பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.இந்தப் பகுதிகளிலிருந்து ஜிஎஸ்டி சாலையை அடைவதற்கு, குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் உள்ள எல்.சி-27 ரயில்வே கேட்டைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு இருந்து வந்தது. இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு வந்ததால், பொது மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வந்தனர்.
இந்த நிலை தொடர்ந்ததை அடுத்து, பொதுமக்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும், நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2009 ஆம் ஆண்டு ரூபாய் 14.75 கோடி செலவில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையும் தெற்கு ரயில்வேவும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தன. ரயில்வே தரப்பில் சுமார் ரூபாய் 4 கோடி செலவில் ரயில் பாதைக்கு கீழ் கான்கிரீட் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டன. பணிகளின் போது பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டது.எனவே, அவை வெட்டி அகற்றப்பட்டு ரயில் பாதை பணிகள் நிறைவு செய்யப்பட்டது.
இந்த திட்டத்திற்காக ரயில் பாதையின் கிழக்குப் பகுதியில் 1,935 சதுர மீட்டரும், மேற்குப் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான 900 சதுர மீட்டர் நிலமும் தேவைப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர்.
இதற்கிடையில், ராதாநகர் பகுதியில் உள்ள 46 கட்டிடங்கள் சுரங்கப்பாதை அமைப்பதற்காக பகுதி அளவில் இடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கான இழப்பீடாக ரூபாய் 6 கோடியே 46 லட்சம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இழப்பீடு போதாது எனக் கூறி 26 கட்டிட உரிமையாளர்கள் நீதிமன்றத்தை அணுகிணார்கள்.அதனால் இந்த திட்டம் பல ஆண்டுகள் நடை முறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது
2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீடும் ஏற்கப்பட வில்லை.  இந்நிலையில், சுரங்கப்பாதை பணிகளை தொடர நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தடையாக இருந்தக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, சுமார் ரூபாய் 26 கோடி செலவில் சுரங்கப்பாதை பணிகள் மீண்டும் தொடங்கின.
கார், ஆம்புலன்ஸ், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவை செல்லும் வகையில் ஐந்தரை மீட்டர் அகலமும், பாதசாரிகள் நடந்து செல்ல 2 மீட்டர் அகலமும் கொண்ட சுரங்கப்பாதை இங்கு அமைக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகு, மின்சார மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்கள் மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
ஜிஎஸ்டி சாலையை ஒட்டிய மேற்கு பகுதி மற்றும் கிழக்கு பகுதி ஆகிய இருபுறங்களிலும் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், நேற்று இந்த சுரங்கப்பாதை திறந்து வைக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களின் கனவு நிறைவேறியதால், இந்த திட்டம் குரோம்பேட்டை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!