கவிதை

போரிணையமும் நீரிணையமும்

103views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
நீர்வாய்களைக் கொண்டும்
போர் வாய்களை
மூட முடியும் என்பது அதிசயம்தான்…
திறந்திருந்ததை
அடைக்கிறார்கள் இவர்கள்
சீறிச் சினந்ததை
அடக்க முயல்கிறார்கள் அவர்கள்…
ஞானம் உள்ளவன்
வாயை மூடிக் கொள்கையில்
பிணங்களை வைத்துப் பேசுகிறான்
பேயரக்கன்…
எந்த மனிதனுக்கும்
மரணம் விலக்கல்ல…
ஆனால் எப்படி என்பது கேள்வி..
சிலருக்கு
மரணத்தின் பக்கங்கள்
சொர்க்கங்கள் ஆகின்றன…
சிலருக்கு
துக்கங்கள் ஆகின்றன…
வரலாற்றின் பக்கங்கள்
அவற்றை விதவிதமாய்
வர்ணனைகள் செய்கின்றன…
பெண்கள் குழந்தைகள்
பெரியோர்கள் என்று
பிரித்துப் பார்க்கும் பேதமற்றுக்
கொன்றவர்கள்…
மருத்துவமனைகள் பள்ளிகள்
இறைத்தொழும் ஆலயங்கள்
என்ற அறிவு கூட அற்றவர்கள்…
சிதறும் குண்டுகளுக்காகச்
சினந்து பேசுகிறார்கள்…
வரைமுறைகள் கடந்த
வன்முறையாளனாய்
நீள வாலாட்டிய போதெல்லாம்
எந்த நடுநிலையாளரும்
வாய் பேசவில்லை…
ஐநாக்களின்
அசாத்திய மவுனம்
வல்லரக்கருக்கான
இன்னொரு துருப்புச் சீட்டு…
வேண்டியவருக்காக
இரக்கப்படும் போது மட்டும்
அது ஒன்றிண்டு மலர் வளையங்களோடு
வருகிறது…
உயிரிருக்கிறது என்று காட்டுவதற்காக…
பரவாயில்லை
நல்லதேசத் தலைவர்களை
ஏழை நாட்டு மக்களின்
கண்ணீரும் பிரார்த்தனைகளும்
சொர்க்கத்தில் சேர்க்கின்றன
வியாபாரத் திருடர்களின்
முடிவுகளை வெடிகுண்டுகள்
தீர்மானிக்கின்றன…
எல்லாம் பாடம் தான்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!