கவிதை

தமிழ் மொழி

108views
(இன்னிசை வெண்பா)
சிந்தை மயக்கிடும் செம்மொழி எம்மொழி
சந்தமும் இன்னிசைத் தாளமும் கொண்டிருக்கும்
செந்தமிழ்ச் சீர்களைச் செப்பினால் வாய்மணக்கும்
சிந்திடும் என்நாவில் தேன்!
உற்றவர் வாழ்வில் உயர்ந்தோங்கத் தந்திட்ட
நற்றமிழ்க் காப்பியங்கள் நற்பாக்கள் யாவையும்
வேற்றுமொழி சேராத வித்தகர்கள் யாப்புகள்
நாற்றிசையும் சாற்றுவோம் நன்று
மோனை எதுகையென முத்தமிழ்ப் பாக்களில்
தேனைப்போல் இன்சுவை தீந்தமிழ்சொல் கோர்க்கவே
வானளவுச் சொற்கள் வளமாய் விரிந்திருக்க
கானமாய்ப் பாடுக் கருத்து
– கீதா அருண்ராஜ்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!