29views
அத்தாவுல்லா
நாகர்கோவில்.
கண் முன்னால் கலவரங்கள்
கண நேரங்களுக்குள்
முடிந்து விடும் ரணகளங்கள்
மரண களங்கள்….
மகிழ்வுகளின் பொழுதுகள்
மனங்களுக்குள் ஆட
கைகாட்டிப் பிரியும் முன்னே
விளைந்து விட்ட விபரீதங்கள்…
எத்தனை பேர் ஏக்கக் கனவுகள்…
எத்தனை பேர் நிம்மதி தொலைத்தல்கள்…
எத்தனை பேர் எண்ணக் கருக்கல்கள்….
நிமிடத்திற்குள்
முடிந்து போன நிர்மூலங்கள்…
மகிழ்வுகளின் புன்னகைகள்
ஏந்தி நிற்கும்
விமான நிலையங்களும்
விமானங்களும்
இனி பார்க்கும் போதெல்லாம்
பற்றிக்கொள்ளும்
நெருப்பு வளையங்களாய்
நெஞ்சுக்குள் எழுமோ…
கணவனைக் காண
புறப்பட்ட ஒருத்தி…
கனவுகள் ஏந்தி நடந்த
ஒரு குடும்பம்…
தாயைப் பார்க்க
தந்தையைப் பார்க்க
மகனைப் பார்க்க
பேரப்பள்ளைகளை பார்க்க…
பாடம்படிக்க…
வேலை பார்க்க….
எல்லோர் மகிழ்ச்சிகளையும்
ஒரு தீப்புயல் வந்து
சுருட்டிப் போனதா?
அவர்கள் கனவுகள் கருக்கிய
கருப்புகைக்கு இவ்வளவு அடர்த்தியா…?
வானம் நீலமிழந்ததே…
பூமி பசுமை தொலைத்ததே…
எண்ணிய இலக்கல்ல
எட்டிய தூரங்கள் எட்டு முன்பே
வெடித்துச் சிதறியதே..
தன்னை அறிந்தவர்
தன்னை உணருமுன்-
பெட்ரோல் எண்ணைக் குடித்து
உயிர்கள் பிரிந்தே…
வேண்டாம் இறைவா…
வாழ வந்தவர்களை
முழுதுமாய் வாழ விடு…
ஆசைகள் கெடுத்து
அவசரகதியில் முடிக்காதே…
அவரவர் கனவில்
அவர்களை விடு
கனவுகள் நினைவாகி
வாழ்ந்து முடிந்த பின்
உன்னிடம் எடு…
இதுதான் உன்னிடம்
வைக்கும் கோரிக்கை…
இன்னொரு விபரீதம்
இனி இந்த உலகில்
இதுபோல் வேண்டாம்…
add a comment