தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

47views
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடம் முழுவதும் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பிலும் திருவிழாக்கள் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் கார்த்திகை மாதத்தை ஒட்டி கார்த்திகை தீப உற்சவ திருவிழா இன்று சுவாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் மங்கள வாத்தியங்களுடன் தொடங்கியது. அப்போது பிரியா விடையுடன் சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் வருகிற 6-ந்தேதி திருக்கார்த்திகை தீப விழா நடைபெறுகிறது. அன்று மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்படும்.

திருக்கார்த்திகை அன்று இரவு சுவாமி, அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி கீழ மாசிவீதியில் எழுந்தருளுகின்றனர். அம்மன் மற்றும் சாமி சன்னதி தேரடி அருகே உள்ள பூக்கடைதெருவில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதேபோன்று மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவில்களான தெப்பக் குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், பேச்சியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் கார்த்திகை திருநாள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!