கட்டுரை

கிறிஸ்துமஸ், வார இறுதி விடுமுறை! கூடுதல் சிறப்பு பேருந்துகள்இயக்கம்! அரசு அறிவிப்பு!!

230views
முனைவர் என்.பத்ரி
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி பயணம் செய்யும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகம் தேவையான சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பள்ளிகளின் அரையாண்டு விடுமுறை காலம் என்பதால் குடும்பங்களுடன் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், திருவான்மியூர் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், சேலம், நெல்லை, மதுரை ஆகிய முக்கிய நகரங்களுக்கு மொத்தம் 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் டிசம்பர் 23 அன்று 255 சிறப்பு பேருந்துகளும், டிசம்பர் 24 அன்று 525 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்களிலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கு 91 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தேவைக்கேற்ப அனைத்து பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவில் இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பதிவு செய்துள்ளதாகவும், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நீண்ட தூர பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வழக்கத்தை விட மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காலத்தில், விடுமுறை பருவத்தை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மூன்று மடங்கு உயர்வாக இருப்பதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையிலிருந்து நெல்லை செல்லும் வழக்கமான கட்டணம் சுமார் 1,400 ரூபாயில் இருந்து 1,800 ரூபாய் வரை இருந்தது. ஆனால் தற்போது, குறைந்தபட்சம் 2,000 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 4,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையிலிருந்து கோவை செல்லும் வழக்கமான நாட்களில் கட்டணம் 800 முதல் 1,200 ரூபாய் வரை இருந்தது. ஆனால் தற்போது இதனை 3,000 முதல் 5,000 ரூபாய் வரை உயர்த்தி வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல், சென்னையிலிருந்து மதுரை மற்றும் நாகர்கோவில் செல்ல அதிகபட்ச கட்டணம் 4,000 ரூபாய், திருச்சி செல்ல 3,600 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு, குடும்பத்துடன் சொந்த ஊருக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆம்னி பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!