அனைத்து துறைகளிலும் அறிவு மிகுந்தவராக திகழ்ந்தார் கருணாநிதி – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்
தமிழ்நாட்டில் முதன்முதலில், 1921-ம் ஆண்டு மேலவை என்று சொல்லப்படும் சட்டமன்ற கவுன்சில் அமைக்கப்பட்டது. அதன் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவும், சட்டமன்ற அரங்கத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழாவும் என இருபெரும் விழா நடைபெற்றது.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்ற கூட்ட அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற இந்த விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.
முதலில் தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சபாநாயகர் அப்பாவு, வரவேற்புரை வழங்கினார்.
விழாவில் அனைவருக்கும் மாலை வணக்கம் என தமிழில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்க தனித்துவம் மிகுந்தவர் கருணாநிதி; அனைத்து துறைகளிலும் அறிவு மிகுந்தவராக திகழ்ந்தார். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மிகச்சிறந்த வரலாறு உள்ளது; இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது.
நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.