96426568
கவிதை

முக்காடுகள்

51views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
பூவின் மலர்ச்சியைப்போல
ஒட்டிக்கொண்டிருக்கும் மரபுகள்
இயல்புகளின் ஒழுங்குகள்…
எதுவும் சொல்லிக் கொண்டும்
வருவதில்லை…
சொல்லியும்
தெரிவதில்லை…
வீட்டு முற்றங்கள் தாண்டாத
பத்தினியர்
முற்றங்கள் உண்டு
காதுகளின்
தங்கக் கம்மல்கள்
வீசி எறிந்து
கோழிகள் துரத்திய
தினைப்புனப் பெண்கள் உண்டு…
அரிசி புடைக்கும் முறத்தால்
புலி அடித்து விரட்டிய
வீரப் பெண்மணிகள் உண்டு…
எதிரி மன்னன்
படைக்களம் புகுந்தும்
நீதி சொன்ன
அறப்பெண்டிர் உண்டு…
மார்பு திருகி எறிந்து
முறைகேட்ட
பத்தினிக்கதைகள் உண்டு…
கோவலனுக்கு மட்டுமே
கானல்வரி பாடிய
மாதவிக்குப் பிறந்த
அட்சய பாத்திர
மணிமேகலைகள் உண்டு…
ஒவ்வொரு பூவுக்கும்
ஒரு வாசம்
ஒரே வாசத்தில் இருக்க
இது என்ன அகண்ட பாரதமா?
உன் மதம் உனக்கு
என் மதம் எனக்கு
என்பது ஒருவனுக்கு…
எம்மதமும் சம்மதம்
என்பது இன்னொருவனுக்கு..
பொங்கலில் பொங்கும்
பானைகள்
பிறதொரு சமயங்களில்
கறிசோறும்
காட்டி கமகமக்கும்…
அச்சமும் நாணமும்
மடமும் பயிர்ப்பும்
பூவினப்பெண்களின்
மரபியல் கலவை…
பாவாடை தாவணி
சுடிதார் லெக்கின்ஸ்
நவீனங்கள் காட்டும்
உலகியல் நிலைமை
வடநாட்டுப் பெண்களிலும் கூட
முடி மறைத்து
முக்காடு போடுபவர்கள் உண்டு…
இஸ்லாமியரில் கூட
முக்காடு இல்லாமல்
வருபவர்கள் உண்டு…
ஒரு ரோஜாவுக்காக
மல்லிகையை யாரும் வெறுப்பதில்லை..
ஒரு பூ என்பது
எப்போதும் பூ தான்..
ஏனெனில்
பூக்களுக்கு அரசியல் இல்லை…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!