ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில் அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதரமாவட்டங்களில் காலியாக உள்ளஉள்ளாட்சி பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு,அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளபகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மேலும், இதர 28 மாவட்டங்களில் அக்.9-ம் தேதி தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும்பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.