கேரள எல்லையையொட்டி இருப்பதால், கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. அதே போல் நாட்டிலேயே கேரளாவில் பாதிப்பு குறையவில்லை. தமிழகத்தில் ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் கேரளாவில் தினமும் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து மால்கள், பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கலாம். பொள்ளாச்சி மாட்டு சந்தை இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவைக்கு விமானம் மற்றும் ரயிலில் வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா பரிசோதனை அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.