வினாத்தாளில் வன்முறை… சிபிஎஸ்இ தேர்வில் எழுந்த சர்ச்சையும் விளக்கமும்
குஜராத் கலவரம் குறித்து இடம்பெற்ற கேள்வி சர்ச்சையான நிலையில், இக்கேள்வு தேர்வுசெய்த குழுவுக்கு சிபிஎஸ்இ கண்டனம் தெரிவித்துள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது. அப்போது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாப்ரியும் கொல்லப்பட்டார். அதன்பின் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முதல் பருவ பொதுத்தேர்வு சமூகவியல் பாடத்தில் குஜராத் கலவரம் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையானது. இது சிபிஎஸ்இ-இன் வழிகாட்டுதல்களுக்கு எதிரான கேள்வி என்றும், கேள்வித்தாளை தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுத்தேர்வு வினாக்கள் கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், சமூகம் மற்றும் அரசியல் விருப்பங்களுக்கு ஏற்ப பொதுமக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வினாக்கள் அமையக்கூடாது என்றும் வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.