வடகொரிய அதிபர் கிம் உடன் டொனால்டு டிரம்ப் தொடர்பில் உள்ளார் – புதிய தகவல்
அமெரிக்காவின் 45-வது அதிபராக செயல்பட்டவர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக செயல்பட்டார். இவர் அதிபராக இருந்தபோது அமெரிக்கா – வடகொரியா இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. டொனால்டு டிரம்பிற்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே தனிப்பட்ட நட்பு நிலவி வந்தது.
இந்நிலையில், அதிபர் பதவியில் இல்லாத போது இப்போதும் தற்போதுவரை வடகொரிய அதிபர் கிம் உடன் டொனால்டு டிரம்ப் தொடர்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி ஆசிரியரும், சி.என்.என் செய்தி நிறுவனத்தின் அரசியல் ஆய்வாளருமான மேகி ஹபிர்மென் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து “கான்பிடண்ட் மென்: தி மேக்கிங் ஆஃப் டொனால்டு டிரம்ப் அண்ட் பிரேக்கிங் ஆஃப் அமெரிக்கா” என்ற தலைப்பில் மேகி புதிதாக புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு மேகி ஹபிர்மென் அளித்த பேட்டியில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தான் தற்போதும் வடகொரிய அதிபர் கிம் உடன் தொடர்பில் இருப்பதாக தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளார். கிம் உடன் மட்டுமே டிரம்ப் தொடர்பில் உள்ளார்’ என்றார்.
கிம் உடன் தொடரில் உள்ளதாக மேகி ஹபிர்மென் தெரித்த கருத்துக்கு டொனால்டு டிரம்ப் அறிக்கை மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.
டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் மட்டுமே பேசுவதாகவும், உலக நாடுகளின் மற்ற தலைவர்களுடன் பேசவில்லை என்றும் மேகி ஹபிர்மென் கூறியுள்ளார். அது தவறு’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் உடன் பேசி வருவதாக மேகி ஹபிர்மென் தெரிவித்துள்ள தகவலுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.