மூத்த பத்திரிகையாளர் முகம் மாமணி காலமானார்
மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதியான முகம் மாமணி (91) காலமானார்.
பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட முகம் மாமணி, 1953-ல் விடுதலை நாளிதழில் அச்சுகோர்க்கும் பணியாற்றினார்.
பின்னர், 1956 முதல் 1991 வரை 36 ஆண்டுகள் எல்ஐசி-ல் பணிபுரிந்தார். 1982-ல் கே.கே. நகரில் இலக்கிய வட்டம் அமைப்பை ஏற்படுத்தி, மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சொற்பொழிவுக் கூட்டங்களை நடத்தினார்.
சிறு வயது முதலே எழுத்து, பேச்சில் ஆர்வம் கொண்ட முகம் மாமணி, 1983-ல் முகம் என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கி, 40 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.
தமிழறிஞர்கள் நாரண.துரைக்கண்ணன், கா.அப்பாத்துரை, கிஆபெ.விஸ்வநாதம் ஆகியோரின் வரலாற்றை முகம் இதழிலும், பின்னர் நூல்களாகவும் வெளியிட்டார். இவரது படைப்புகள் 22 நூல்களாக வெளிவந்துள்ளன.
இவர் வயது மூப்பு காரணமாக கே.கே. நகரில் உள்ள இல்லத்தில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு நெசப்பாக்கம் மின் மயானத்தில், தமிழ்முறைப்படி திருக்குறள் ஓதி நடைபெற்றது. அவருக்கு மனைவி ராதா, மகன்கள் புகழ், அருள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.