மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: பிரிட்டனில் ஒரேநாளில் 82,886 பேருக்கு தொற்று
ஒமைக்ரான் வகை கொரோனாவால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரிட்டன் உள்ளது. இதனிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவை வர இருப்பதால் கொரோனா பாதிப்பு மேலும் உச்சத்தை தொடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக நாளொன்றுக்கு 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகும் நிலை உருவாக கூடும் என்பதால் அரசு உடனடியாக கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே நேற்று ஒரே நாளில் 82,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்று கண்டறியப்பட்ட 28 நாட்களில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக பிரிட்டன் அரசு கூறியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட இந்த வாரம் 51.9% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கையில் 60 விழுக்காடு ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறியுள்ள பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் ஜாவிட், மணிக்கு ஒருமுறை நிலவரத்தை கண்காணிப்பதாக கூறியுள்ளார். விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அமலாகும் என்றும் தெரிவித்துள்ளார். லண்டன் நகர மேயரும் கட்டுப்பாடுகள் அமலாகலாம் என தெரிவித்திருப்பதால் பிரிட்டனில் மீண்டும் பொதுமுடக்கம் வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.