போராட்டம் நடத்திய பொதுமக்களை சுட்டுக் கொன்று மியான்மரில் 30 பேரை எரித்த ராணுவம்
அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்ற ராணுவத்தினர் அவர்களது உடல் களை எரித்த சம்பவம் மியான்மர் நாட்டில் நடந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் நடைபெற்ற மியான்மர் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகக் கூறி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மியான்மர் ராணுவத்தினர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியைக் கவிழ்த்து அதி காரத்தைக் கைப்பற்றினர். இன்று வரையிலும் ராணுவ ஆட்சியே அங்கு நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து ஆங் சான் சூகி, அந்த நாட்டின் அதிபர் வின் மைண்ட் உட்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் தடுப்புக் காவலில் வைத்தது. இதுவரை ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 1,500-க்கும் மேற்பட்டோரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
சமீப காலமாக ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்களை ராணுவம் சித்திரவதை செய்து கொலை செய்வதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே மியான்மரின் கிழக்கு பகுதியில் உள்ள கயா மாகாணத்தில் உள்ள மோ சோ கிராமத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை தீ வைத்து எரித்ததாக தகவல் வெளியானது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது:
மோ சோ கிராம மக்கள் ராணுவத் துக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் இருந்து தப்பிக்க மேற்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமை நோக்கி சென்றனர். அவர்களை ராணுவ வீரர்கள் கைது செய்து கை, கால்களை கட்டி சுட்டுக் கொன்றனர். பின்னர் உடல்ளை தீ வைத்து எரித்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் மோ சோ கிராமத்துக்கு அருகில் வாகனங்களில் எரிந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் குழந்தைகள், முதியவர்கள் என பலரின் சடலங்கள் கிடைத்துள்ளன.
இவர்கள் அனைவரும் மியான் மர் ராணுவத்தால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டவர்கள் என்று ‘காரென்னி’ எனப்படும் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டி இதுதொடர்பான புகைப்படங் களையும் வெளியிட்டு கண்டித் துள்ளது. அதே நேரத்தில் கொல்லப்பட்ட அனைவரும் தீவிரவாதிகள் என்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் மியான்மர் ராணுவதரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.