செய்திகள்தமிழகம்

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு தொடக்கம்

67views

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்யும் பணியை சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.

கோட்டை, கொத்தளங்களுடன் உள்ள பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்வதற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்ததைஅடுத்து, அங்கு தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட மேலாய்வின்போது கருப்பு, ஊதா வண்ணவளையல்களின் உடைந்த பகுதிகள், உருக்கு மூலம் உருவாக்கப்பட்ட இரும்புத் துண்டுகள், நிறமற்றகண்ணாடி படிகம், குறியீடுகளுடன்கூடிய பானை ஓடுகள் கிடைத்தன.

மேலும், தட்டு, கிண்ணம், கலயங்களின் உடைந்த பகுதிகள், உருக்கு உலையின் அடிமானங்கள், உலோகக் கழிவுகளும் கிடைத்துள்ளன. சங்க காலத்தைச் சேர்ந்தபச்சை, கருஞ்சிவப்பு, ஊதா, பழுப்பு, கருப்பு, இளமஞ்சள் வண்ணங்களில் மணிகள் கிடைத்தன.

தொடர்ந்து, பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் துறைப் பேராசிரியர் இனியன் தலைமையில் அகழாய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

அகழாய்வுப் பணியை ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

அப்போது, ‘தமிழர்களின் பாரம்பரியங்களை வெளிக்கொண்டுவருவது, பாதுகாப்பது, அடையாளப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்யும். இங்கு மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணியை முழுமையாக மேற்கொள்ளத் தேவையான நிதி, அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படும்’ என்றார்.

பொற்பனைக்கோட்டையில், 8 மீட்டர் நீள அகலத்துக்கு முதல்கட்டமாக அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. வெட்டி எடுக்கப்படும் மண்ணை சேகரித்து, அதில்தொல்லியல் பொருட்கள் கிடைக்கின்றனவா என தொல்லியல் ஆய்வாளர்கள் சல்லடை போட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!