சினிமா

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மணிரத்னத்தால் மட்டுமே சாத்தியம் – பாடல் வெளியீட்டு விழாவில் கார்த்தி கருத்து

47views

‘பொன்னியின் செல்வன்’ போன்ற படத்தை எடுப்பது மணிரத்னத்தால் மட்டுமே சாத்தியம் என்று நடிகர் கார்த்தி கூறினார்.

அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் திரைப்படமாக்கி இருக்கிறார். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. செப். 30-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ‘பொன்னி நதி’ என்ற முதல் பாடல், ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கார்த்தி பேசியதாவது:

‘பொன்னியின் செல்வன்’ நம் படம், தமிழர்களின் படம். ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்துள்ளார். ‘எவ்வளவு போராடினாலும் இந்த படத்தை எடுத்து முடிக்க முடியாது’ என்று பலர் கூறினர். ஆனால், ஒரு நதிக்கு கடல் எங்கு இருக்கிறது என்று தெரியும். அதேபோல, இந்த படத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பது மணிரத்னத்துக்கு தெரியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.

120 நாட்களிலேயே இப்படத்தின் 2 பாகங்களையும் அவர் முடித்துவிட்டார். இது சாதாரண விஷயம் அல்ல. இதுபோன்ற படத்தை எடுக்க வேண்டும் என்று கற்பனை செய்வதற்கே 10 ஆண்டுகள் ஆகும். மணிரத்னத்தால் மட்டுமே இது சாத்தியம். இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!