ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர் பிப்.10ம் தேதி முதல் ஐபிஎல் தொடருக்கு முன்பும், பின்பும் என 2 கட்டங்களாக நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. நாட்டின் முக்கிய கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர் கொரோனா பீதி காரணமாக 2020ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.மேலும் 2021ம் ஆண்டுக்கான தொடர் இந்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் அறிவித்தபடி போட்டி தொடங்கவில்லை.
இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கும் தேதியை பிசிசிஐ நேற்று அதிகார பூர்வமாக அறிவித்தது. அதே நேரத்தில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்பும், பின்பும் என 2 கட்டங்களாக ரஞ்சி போட்டி நடைபெறும். அதன்படி முதல் கட்ட போட்டி பிப்.10ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை நடைபெறும். தொடர்ந்து 2வது கட்ட போட்டி மே 30ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை நடக்கும்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ரயில்வே என 38 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கும். அவை 8 எலைட் பிரிவுகளாகவும், ஒரு பிளேட் பிரிவாகவும் பிரிக்கப்பட்டு ஆட்டங்கள் நடத்தப்படும். மொத்தம் 62 நாட்கள் 64 ஆட்டங்கள் சென்னை, திருவனந்தபுரம், கொல்கத்தா, டெல்லி, கவுகாத்தி, கட்டாக், அரியானா, ராஜ்காட், அகமதாபாத் ஆகிய 9 இடங்களில் நடக்கும்.