468views
பாரம்பரிய பொருட்கள் சேகரிப்பாளர் அய்யனார் வீட்டிற்குள் நவீன வசதிகளுடன் கூடிய அந்த கால கட்டிடக் கலையை இணைத்திருக்கும் அழகு நம் கண்களை கவர்கிறது.. வேலைப்பாடுடன் கூடிய தேக்கு மர கதவுகள், வித்யாசமான கைப்பிடிகள், மரவேலைப்பாடுகள், செட்டி நாட்டு மொசைக் போன்றவற்றை பார்க்கும் போதே அவரது கலாரசனை நமக்கு புரிகிறது .
மாடிக்குச் செல்லும் வழிகளில்.. முதல் மாடி என ஒரு தளத்தையே பாரம்பரிய பொருட்களை கொண்டு காட்சிப்படுத்தியிருக்கிறார் .நேர்த்தியாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதம் நம் கண்களையும் கருத்தையும் ஒருங்கே கவருகிறது. பெரும்பாலும் பித்தளைப் பொருட்கள். முன்னோர்களின் வாழ்க்கையில் கலைநயத்துடன் கூடிய அன்றாட பயன்பாட்டில் இத்தனை பொருட்களா? என வியப்பாக இருக்கிறது .

வெற்றிலைப் பெட்டி பாத்திரங்கள் சாவி தட்டு டம்ளர் அடுக்கு சட்டி கொத்துச் சட்டி. பாதாள கரண்டி எண்ணெய் சட்டி விளக்கு குடம் எண்ணெய் பாத்திரம் இட்லி குண்டான் பாய்லர் உருவச்சிலைகள் முறுக்கு அச்சி… கிண்ணம் ..அடுக்கு. அண்டா குண்டா .கெரண்டி .பீரங்கி தூக்குவாளி ஜல்லடை வெற்றிலை உரல். பஞ்ச பாத்திரம்…
இருங்கள் ..கொஞ்சமா மூச்சுவிட்டுக் கொள்கிறேன்..

சிறிய வயதில் எல்லாக் குழந்தைகளையும் போல ஸ்டாம்ப் ..காசுகள் சேகரிக்கத் தொடங்கி இன்று இத்தனை பொருட்களை சேகரிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. இதற்காகவே என் வீட்டின் முதல் தளத்தில் ஒதுங்கி இருக்கிறேன். இன்றைய குழந்தைகளுக்கு நமது பாரம்பரியத்தை கொண்டு செல்வதே என் நோக்கம். கூடியவிரைவில் ஒவ்வொரு பாத்திரம் பற்றிய விளக்கத்துடன் ஒரு புத்தகம் வெளிவருகிறது என்று கூறும் புதுவை அரசின் நடவடிக்கையில் சுகாதார ஆய்வாளராக பணி செய்யும் அய்யனார் தனது வருமானத்தில் பெரிய பங்கை இதற்காக செலவு செய்திருக்கிறார்.. இவரது மனைவி ஹேமா இந்திய அரசின் நைட்டிங்கேல் விருது பெற்ற செவிலியராக அரசு மருத்துவமனையில் பணி செய்கிறார்கள்.






