நீலகிரி மாவட்டத்தில் உறை பனி சீசன் தொடங்கியது, இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் வரை உள்ளதால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உட்பட பல பகுதிகளில் பனி பொழிவால் பொது மக்களின் இயல்பு வாழக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது
ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனியின் தாக்கம் அதிகம் காணப்படும்.
கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் மழை காரணமாக இந்த முறை பனிப்பொழிவு தாமதமாக துவங்கியுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உதகை நகரில் மத்திய பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், புல்வெளிகளில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
உதகையில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகிறது, மேலும் கடும் பனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைப் பனி சூழ்ந்து காணப்பட்டது, இதனால் வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். குறிப்பாக பனியின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதால் அதிகாலை காய்கறி விவசாயம், மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள்,வாகன ஓட்டுனர்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் படைந்துள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பகல் நேரத்திலேயே சாலை ஓரங்களில் தீ மூட்டி குளிர்காயும் சூழல் ஏற்பட்டுள்ளது