துபாய் எக்ஸ்போ; தமிழ்நாடு அரங்கு- முதலமைச்சர் திறப்பு
துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு துபாயில், எக்ஸ்போ கண்காட்சி கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியின் கடைசி வாரம், தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி. எக்ஸ்போ கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த அரங்கில் தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கும் சிலைகள், வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாகக் கண்காட்சி அமைந்துள்ளதாகவும், அதுதொடர்பான புரிதலைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் கீழடியின் காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. அப்போது இடம்பெற்ற செம்மொழியான தமிழ்மொழி பாடலையும், அதில் இடம்பெற்ற தொல்தமிழர் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையிலான காட்சிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வமுடன் ரசித்துப் பார்த்தார்.