நான்கு நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது . 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . இந்தியா உள்பட 192 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் இன்று முதல், மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விமானம் மூலம் துபாய் சென்றடைந்தார்.
துபாய் சென்ற அவரை துபாய்க்கான இந்திய தூதர் அமன் புரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் வரவேற்றனர். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வரான பின் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் அயல்நாட்டு பயணம் இது.
முதலமைச்சர் தலைமையிலான இக்குழுவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். துபாயை தொடர்ந்து அபுதாபிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.