“திருமண உதவித்திட்டம், உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்பட்டது ஏன்?” -முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
தமிழக சட்டசபையில் கடந்த 18-ம் தேதி 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.
இதில் பல்வேறு அறிவிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் கல்வி உதவி திட்டமாக மாற்றப்பட்டது குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து. அதனால் தான் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற தகுதிக்கு முன் கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும். சமூக நீதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமண உதவித் தொகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தனர். தற்போது இந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு 6 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.