தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மற்றும் நாளை, நீலகிரி, கோவை, சேலம், மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 7, 8-ம் தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர் ,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
இன்று முதல் ஆக. 8 வரை தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.