செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? : முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

58views

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 10ஆம் தேதி முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் அதை முறையாக பின்பற்றவில்லை என்பதால் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அப்போது தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்து வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடுமையான ஊரடங்கின் பலனாக தொற்று வேகம் மெல்ல மெல்ல குறைந்தது.

நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நோய் பரவல் 18 ஆயிரமாக குறைந்துள்ளது. கடந்த வாரம் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு குறைந்த தளர்வுகளும், தொற்று பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு சற்றே அதிக தளர்வுகளும் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் வரும் வாரம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

வழக்கமாக வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெறும் நிலையில், முதலமைச்சர் இன்று இரவு திருச்சி செல்ல இருப்பதால், முன்னதாகவே ஆலோசனை நடைபெற உள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!