சென்னை ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி ஆளுநர், மத்திய அமைச்சர் தமிழக ஆளுநருடன் சந்திப்பு: மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அவரைத் தொடர்ந்து, ஆளுநர் ரவியை, மத்திய தகவல் மற்றும்ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பதிவில், ”தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னையில் சந்தித்தேன். அவரது பரந்த அனுபவம், நமதுமாநிலத்தின் நலனுக்காக மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.