சிட்னியில் தொடர் மழை; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சிட்னியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் சிட்னி மக்கள் அனைவரும் அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சிட்னியில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரே இரவில் கொட்டித் தீர்த்ததால், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தன. ஆறுகள் குப்பைகளால் நிரம்பின.
சிட்னியில் இவ்வாண்டில் இதுவரை 1,226.8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இது ஆண்டு சராசரியான 1,213 மில்லிமீட்டரைவிட அதிகம்.
வடமேற்கு பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
பெட்ரோல் நிலையம் ஒன்று வெள்ளத்தில் மூழ்கியதால், வெள்ள நீரில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. ஆனால், சில மணி நேரங்களில் எண்ணெய்க் கசிவு கட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஆபத்து எதுவும் இல்லை என்றும் அவசர உதவி குழுவினர் கூறினர்.