களமிறங்கிய உலகின் மிகப்பெரிய ஹேக்கிங் குழு: ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்கள் கசிவு
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய அடையாளம் தெரியாத ஹேக்கிங் குழு களமிறங்கியுள்ளது. அனானமஸ் என்று பெயர் கொண்ட இந்த ஹேக்கிங் அமைப்பில் உலகம் முழுவதும் உள்ள ஹேக்கர்களின் வலைதள அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஹேக்கிங் அமைப்பு ரஷியா மீது இணையதள தாக்குதலை தொடங்கியுள்ளது. ரஷியாவின் அரசு இணையதள பக்கங்கள், ரஷிய ஊடகங்கள், ரஷிய நிறுவனங்கள் என ரஷியாவுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகள் மீதும் இந்த அமைப்பு சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது.
தற்போது, ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களை அனானமஸ் ஹேக்கிங் அமைப்பு கசியவிட்டுள்ளது. அடையாளம் தெரியாத அனானமஸ் ஹேக்கிங் அமைப்பால் ரஷிய அரசின் பல்வேறு இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் ரஷிய அதிகாரிகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.