சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த, சுமார் 8 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே, விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாததால், நெல்மூட்டைகள் மழையில் நனைந்து,விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கத் தவறிய அரசின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது.
தற்போது பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி, பாதிப்புகளை மதிப்பிட்டு, உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.
மத்திய அரசு புயல் நிவாரணம் வழங்கவில்லை என்று காரணம் கூறாமல், முழுமையாக சேதமடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.40,000, மறு சாகுபடி செலவுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும். மேலும், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்த விவசாயிகளுக்கு, உடனடியாக காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.