உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடக்கும் – ஐ.நா சபை வேதனை
உக்ரைனிலிருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் ஒரு வார காலத்துக்கும் மேலாக நீடித்துவருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் காரணமாக அந்நாட்டின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து சாரை சாரையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கு குழந்தைகளுடன் ஏராளமான உக்ரேனியர்கள் சென்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலந்தின் மெடிகா எல்லைக்கு சென்ற மக்களை அங்கு காத்திருந்த உறவினர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர்.
போருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் வெளியேறி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் உதவ ஏராளமானோர் நாடு திரும்பி வருகின்றனர். போலந்தில் வாழ உக்ரேனியர்கள் சிலர் ரயில் மூலம் லீவ் மற்றும் ஒடேசா நகரங்களுக்கு வந்தடைந்தனர்.
உக்ரைனில் 2.65 லட்சம் கர்ப்பிணிகள் உள்ளதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், அதில் 80,000 பேருக்கு 3 மாதங்களில் குழந்தை பிறக்கும் என தெரிவித்துள்ளது. உக்ரைனை விட்டு இடம் பெயரும் கர்ப்பிணிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் உறுதியளித்துள்ளது.
உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் அளித்துள்ளது. சனிக்கிழமை வரையில் 13 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளனர். ஞாயிற்றுகிழமைக்குள் உக்ரைனிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாக அதிகரிக்கும். இரண்டாம் உலகப் போர் முடிவுக்குப் பிறகு அதிவேகமாக மக்கள் வெளியேறுவது இதுதான் முதல்முறை என்று ஐநா சபை தெரிவித்துள்ளது. உக்ரைனிலிருந்து வெளியேறிதில் 50 சதவீதம் பேர் போலந்து வழியாகத் தான் சென்றுள்ளனர்.